Translate

Monday, May 28, 2018

எழுதுகோலில் எளிமையை ஊற்றி எழுதும் கவிஞன்.



“மிகவும் எளிமையாக நீங்கள் கவிதை எழுதுவது, கவிதையுலகில் நீங்கள் வெற்றி பெற செய்யும் தந்திரமா?”

என்று கவிஞர் மு.மேத்தாவிடம் பத்திரிக்கையாளர் ஒரு நேர்காணலில் கேட்டபோது,

கவிஞர் சொன்னார்: தந்திரம் அன்று.

சுதந்திரம். நான் எளிமையானவன். என் கவிதைகளும் எளிமையானவை.

இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே ? என்று என்னை பார்த்து வியந்தவர்கள் தான் உண்டு.

இவ்வளவு கர்வமாக இருக்கிறாரே என்று கோபம் அடைந்தவர்கள் யாரும் இல்லை.

பொதுவாக கவிதையை வகை பிரிக்கும் திறன் ஆய்வாளர்கள் இந்த மாதிரி , முதல் வாசிப்பிலேயே புரிகின்ற கவிதைகளை வெள்ளை கவிதைகள் (white poetries) என்று கூறுவார்கள்.

அப்படி மிக மிக எளிமையாக அமைந்த மேத்தாவின் கவிதைகள் சிலவற்றின் நடை அழகையும், அர்த்த செறிவையும், கற்பனை திறத்தையும் என்னால் முடிந்த வரை இந்த சிறு கட்டுரையில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.


சோவியத் யூனியன் சிதறிய போது, தன் இதயமும் சிதறியதாக தன் கவிதையில் பதிவு செய்யும் மேத்தா அந்த மன அதிர்வை பதிவு செய்ய கற்பனை குதிரையில் ஏறி எங்கெங்கோ செல்லாமல்
மிக இயல்பாக,
சட்டையில் அழுக்கிருந்தால் வெளுத்து பார்க்கலாம் கொளுத்தி பார்க்கலாமா?
               (கனவு குதிரைகள் கவிதை தொகுப்பில் இருந்து )
என்கிறார் .
இந்த கவிதையை போன்றே இணையான கருத்துடைய,
மேத்தாவின் கைவண்ணத்தில் உருவான ,
“சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிடலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்.”
என்ற "வேலைக்காரன் " திரைப்பாடல் வரிகள் ஏற்கனேவே பிரபலம்.


சோவியத் யூனியன்
லெனின் காலத்தில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் உறை
ஸ்டாலின் காலத்தில் உள்நாட்டு அஞ்சல் உறை
கோர்பச்சேவ் காலத்திலோ வெறும் அஞ்சல் அட்டை
               (கனவு குதிரைகள் கவிதை தொகுப்பில் இருந்து )
என்று சோவியத் யூனியனின் வெவ்வேறு காலங்களை
உருவக படுத்தும் மேத்தா அரசியல் துறையுடன் அஞ்சல்துறையை ஒரு சிறு முடிச்சு போடுவதன் மூலம் மிக எளிமையாக தன் கருத்தை வாசகர்கள் மனதில் பதிவு செய்கிறார்.

ஒருவர் என்னதான் கவிதை உலகில் சாதனை செய்தாலும் அவரை இந்த ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.
ஒருவர் திரைப்பட பாடல் எழுதி வெற்றி பெற்று விட்டால், அவருடைய
கவிதைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன.
பெரும்பாலும் இவ்வாறே. விதி விலக்குகள் இருக்கலாம்.
கவிஞர் மேத்தாவே இந்த விசயத்தில் விதி விலக்காகவே இருக்கிறார்.

கவிஞர் மேத்தா திரைப்பட பாடல் துறைக்கு வரும் முன்னரே, "கண்ணீர்ப்பூக்கள்" மற்றும் "ஊர்வலம் " போன்ற கவிதை தொகுப்புகளின் மூலம் ஒரு நாடறிந்த கவிஞனாக உருவாகி இருந்தார்.

மற்றொரு எடுத்துக்காட்டு தமிழ் இசை கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி ஆவார்.
இவர் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒரு நாட்டுபுற இசைப்பாடல் கலைஞராக அறியப்பட்ட பின்பு திரை துறையிலும் நுழைந்து பின்னணி பாடகராக தன பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறார்.


மேத்தா, புஷ்பவனம் குப்புசாமி போன்ற ஆற்றல் மிக்க கலைஞர்களை திரைத்துறையின் புகழ் வெளிச்சம் பாதிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ,ஏனையோர் நிலை அவ்வாறில்லை.
ஒருவர் என்னதான் திறமையை வெளிப்படுத்தினாலும் திரைத்துறையின் அறிமுகம் இல்லாத காரணத்தினாலேயே இந்த மக்களாலும், ஊடகங்களாலும் அடையளாம் காணப்படாமல் போகிற அவலநிலை ஏற்பட்டு விடுகிறது.



இதை படகு காரன் பாட்டு என்ற தன் கவிதையில் சொல்ல வந்த கவிஞர் ,
“கப்பலில் வந்த கனதவான்கள்
கைகள் பிசய
இயந்திர படகுகளில் வந்தோரின்
இதயங்கள் கசிய ”
              (“கனவு குதிரைகள்” கவிதை தொகுப்பில் இருந்து )
என்ற வரிகளில் ,

கப்பலை அரசியல் இயக்கங்களுக்கும் , இயந்திர படகை  திரை துறைக்கும் குறியீடாக மிக பொருத்தமாக கையாண்டிருக்கிறார்.


அரசியல் கட்சித்தலைவர்கள் , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இடத்திற்கு தகுந்த படி பேசி எந்த வளமும் குன்றாமல் வாழ்கிறார்கள்.
ஆனால் தொண்டர்கள்தான் ஒரு அரசியல் கட்சிக்காக தினம் தினம் உழைத்து
பலன் ஏதும் இல்லாமல் மாண்டு போகிறார்கள்.
இந்த அவலத்தை சுட்ட வந்த கவிஞர்,
இந்த தேசத்தில் தலைவர்கள் எல்லாம்
கடிகாரங்கள் மாதிரி
இடத்திற்கு தகுந்தாற்போல்
நேரம் காட்டுகிறார்கள்.
தொண்டர்கள்தான் பாவம்
கிழக்கு வெளுத்த உடன்
கிழித்தெறியப்படுகிறார்கள்.
                       (“கனவு குதிரைகள்” கவிதை தொகுப்பில் இருந்து )
என்கிறார்.
இந்த கவிதையில் , ஒவ்வொரு நாட்டிலும் கடிகாரங்கள் காட்டும் நேரம் வேறுபடுவதும் , ஒரு நாள் முடிந்தவுடன் நாள்காட்டி தாள்கள் கிழித்தெறிய படுவதையும்  தான் சொல்ல வந்த செய்தியோடு மிக அழகாகவும், எளிமையாகவும் பொருத்திவிடுகிறார்.




“சிறகே சுமைதான்” என்று தன கவிதைக்கு தலைப்பிடுவதன் மூலம்,ஒரு பெண் பருவம் அடைவதே அவளுக்கு மிக பெரிய அடிமைத்தனத்தை சுமத்துவதற்கான ஆரம்பமாக மாறி விடுவதை மிக துல்லியமாக சொல்லிவிடுகிறார்.
                    ("அவர்கள் வருகிறார்கள்" கவிதை தொகுப்பில் இருந்து )


கவிஞர் கண்ணதாசன் காலமான போது கவிஞர் மு.மேத்தா எழுதிய இரங்கல் கவிதையில்,
வானவர் தேசத்து வண்ணப்படத்திற்கு
பாடல்கள் புனைந்திட எங்கள் பாவலன் சென்றான்.
அது சரி !
எமன் எப்பொழுது இசையமைப்பாளர் ஆனான்?
                     ("காத்திருந்த காற்று" கவிதை தொகுப்பில் இருந்து )

என்று வினா தொடுத்திருப்பார்.
திரைப்பட பாடல் எழுத ஒரு பாடல் ஆசிரியரை அழைப்பவர் இசை அமைப்பாளரே என்ற நடைமுறை உண்மையை வைத்துக்கொண்டு, மேல் உலகம் சென்றும் கூட கண்ணதாசனின் எழுத்துப்பணி தொடர்வதாக கற்பனை செய்யும் மேத்தாவின் கவிதை ஆற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.



























No comments:

Post a Comment