Translate

Tuesday, November 3, 2015

அமைதியான நதியினிலே ஓடம்

மக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த
சட்டமன்ற தேர்தல் அது.
நான்கு முனை போட்டியில் தமிழகமே பரபரப்பாகி இருந்தது.
தலைவர் கலைஞர் தலைமையில் தி .மு .க ஓர் அணியாகவும் ,
அ.தி.மு.க.  - ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியாகவும் ,
ஜானகி தலைமையில் ஓர் அணியாகவும் ,
மூப்பனார்  தலைமையில்  காங்கிரஸ் ஓர் அணியாகவும் , போட்டி இட்டன.
ஜானகி அணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்பொழுதுதான்
தொடங்கி இருந்த தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்து 
போட்டி இட்டது.
தி. மு. க. தலைவர் கலைஞர் அவர்கள் நடிகர் திலகத்தின்
புதிய கட்சியை பெயரிலேயே இரண்டு முன்னேற்றமா என்று 
தனக்கே உரிய பாணியில் கட்சியின் தொடக்க விழாவில்
பாராட்டி இருந்தார்.
நடிகர் திலகம்தான் தமிழில் நாட்டிலேயே அதிக ஓட்டு
வித்யாசத்தில் திருவையாறு தொகுதியில் வெற்றி பெறுவார்
என்று ஜூனியர்  விகடன் போன்ற  அரசியல் பத்திரிகைகள்
செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன.
தேர்தலும் வந்தது.
முடிவுகள் வெளியாக தொடங்கின.
வானொலியில் செய்திகளை என் ஒட்டு மொத்த குடும்பத்தாரும்
கேட்டு கொண்டிருதனர்
 பெருவாரியான இடங்களில் தி. மு. க. முன்னிலையில் இருப்பதாக
செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
நடிகர் திலகம் தன் தொகுதியில் பின் தங்குகிறார் 
என்று செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை சொல்லி விட்டு ,
ஆண்டவன் கட்டளை படத்தில் இருந்து ஒரு பாடல் தற்பொழுது 
கேட்கலாம் என்றார் செய்தி வாசிப்பாளர்.
அமைதியான நதியினிலே ஓடம்
என்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது
கேட்டு கொண்டிருந்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி
இது தற்செயலா  ?  அல்லது  திட்டமிட செயலா?
எங்களுக்கு புரியவில்லை
இந்த பாடல் முடிந்ததும் அடுத்த அதிர்ச்சி
ஜானகி எம்.ஜி.ஆர் -ம் தோல்வி அடைந்தார் என்பதுதான் அந்த அதிர்ச்சி
இதுக்கும் எதாவது பாட்டு போட்டுட போறாங்க ! என்று
என் அண்ணன் சொல்லி வாய் மூடவில்லை
பொன் எழில் பூத்தது புது வானில் (தி .மு .க வின் உதய சூரியன் 
சின்னத்தின் வெற்றி முகம்) 
வெண்பனி சூடும் நிலவே நில்
என் வன தோட்டத்து வண்ண பறவை 
(எம்.ஜி.ஆர் வீடு  ராமாவரம் தோட்டம் 
மேலும் அ.தி.மு.க ஜானகி அணியின் 
சின்னம் இரட்டை புறா)
சென்றது எங்கே சொல் சொல்
என்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது
நடிகர் திலகத்திற்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல்
பொருந்தி போன அதே வேளையில்
ஜானகி எம் .ஜி.ஆருக்கு கண்ணதாசனின் அண்ணன் மகன்
பஞ்சு அருணாச்சலத்தின் பாடல் பொருந்தி போனது.
நடிகர் திலகம் உலக பெரும் நடிகர்.
அவரை தமிழ் மக்கள் தலை சிறந்த நடிகர் என்று 
கொண்டாடினார்களே தவிர அரசியல் தலைவர் 
என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை
என்றெல்லாம் -
அரசியலை ஆய்வு செய்வோர் கூறினாலும் 
என் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு 
பெரும் வேதனையே .
ஒரு தகுதியும் இல்லாத எத்தனையோ பேர் தேர்தலில்
வெற்றி பெரும் வேளையில் கலை தாயின் தவ புதல்வன் 
கலை வானின் முழு நிலவு எங்கள் நடிகர் திலகத்திற்கு 
திருவையாறு தொகுதியில் இரண்டாம் இடம் கூட
இல்லாமல் நான்காம் இடத்திற்கு தள்ளிய கொடுமையை
என்னென்று உரைப்பது?
இவை எல்லாம் ஒரு புறம் இருக்க 
நடிகர் திலகம் தன் அரசியல் தோல்வி பற்றி கூறும்போது ,
அரசியலில் நான் தோற்கவில்லை 
(அதாவது மக்கள் காரணமில்லை)
வஞ்சிக்க பட்டேன்
(எதிரிகளின் சூழ்ச்சி ) என்றார். 
காலங்கள் பறந்தோடிவிட்டன
இப்பொழுதும் இந்த இரண்டு பாடல்களையும்
கேட்க நேரும்போதெல்லாம் 
மனக்குகையில் உறங்கும் என்  நினைவுகள் மெல்ல கண் விழிக்கும்.

No comments:

Post a Comment